Thursday, 18 December 2014

தாக்கங்கள் ........

                     தாக்கங்கள் ........

நினைத்த கணத்தில் நெஞ்சை துளைக்கும் கூர் வாட்கள்

திரும்பி பார்க்க வைக்கும்  இளம் பிராயத்து  இனிமை கணங்கள்
இன்றும் ஏக்கத்தோடு இமை நனைக்கும் வர்ண ஜாலங்கள்

ஆற்றாமையுடன் கண் நோக்காமல் நிரந்தரமாய் பிரிந்த வலிகள்
அவ்வப்போது ஆழ் மனதில் எட்டி பார்த்த மின் பிம்பங்கள்

அகவைகள் உருண்டோடினாலும் வடுக்களில் ஒளிந்திருக்கும் ரணங்கள்
அடிக்கடி மனம் தவிக்க வைக்கும்  நினைவின் குருதி புனல்கள்

ஏன், எப்படி, எதனால், விடை காண இயலாத வினாக்கள்
கால சக்கரம் களிப்புடன் ஆட்டுவித்த  பொம்மலாட்டங்கள்

எப்படி தேற்றினாலும் மனம் உரசி செல்லும் ஏமாற்றங்கள்
இந்த நிமிடம் மட்டுமே நிரந்தரம் இடித்துரைக்கும் இயல்புநிலைகள் .........

நினைவுகள்.....


நினைவுகள் ஆழ்மனத்தின் ஆல விருட்சங்கள்......

வேர்கள் மட்டுமின்றி விழுதுகளும் அஸ்திவார தூண்கள்.....

வாழ்க்கை பயணப் பாதையில்.....

                 வாழ்க்கை பயணப் பாதையில்.....

சில மனிதர்கள் கரும்பலகையின் வெண் பலப்பங்கல்
சில உறவுகள் குலை தள்ளும் வாழைகள்


சில சந்திப்புகள் ரயில் சிநேகங்கள்
சில முகவரிகள் கசங்கி போன நாட்குறிப்புகள்


சில பந்தங்கள் வலி தரும் நெருஞ்சி முட்கள்
சில காட்சிகள் பசுமரத்து ஆணிகள்


சில அனுபவங்கள் ஏகலைவன் பாடங்கள்
சில காதல்கள் நீறு பூத்த நெருப்புகள்


சில நினைவுகள் கனவில் உயிர் பெரும் சிலைகள்
சில நிஜங்கள் ஆறா ரணம் தரும் மனக்கீறல்கள்


சில வலிகள் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் மழலையின் கைப்பிடிகள்
சில ஆச்சர்யங்கள் மொட்டுக்கள் மலராகும் அபூர்வ தருணங்கள்


சில நேசங்கள் மட்டுமே ஆழ்மன புரிதலின் நேர் அலை வரிசைகள்
சமச்சீராய் மனம் புத்தி  கையாளும் ரசமானிகள்
தகிக்கும் சுட்டெரிக்கும் பாலைவனத்தின் சோலைகள்
மாலைவேளையில் மனம் வருடி செல்லும் மலைய மாருதங்கள்
நினைத்தவுடன் இதழ்கடை தோற்றுவிக்கும் புன்னகை பூக்கள்


அந்நேசத்தை பெற்றவர் அதிர்ஷ்டசாலி...
அதை தொடர்பவர் பாக்கியசாலி .....

வாழ்க்கை.....


வாழ்க்கை ஒரு குழந்தையின் கண்ணாமூச்சி விளையாட்டு!!

கண் மூடி கண்டறிய துடிக்கும் இல் பொருள் காட்சியினை.......

யார் சொன்னார் காதற் பெண்ணிற் கடைக்கண் பட்டு விட்டால்....


கூதிர் காலம் குளும் பனி
நெடிலிரவு குறில் பகல்


இரவு பணி நிறைவு
நிலவின் மனத் தவிப்பு
அளவில்லா ஆசை காதல் ஏக்கம்
மனக் குமுறல் விசும்பல் கேவல்
இன்றும் நெடும் காத்திருப்பா?
இந்த ஆண்களே இப்படித்தானா?


எங்கும் நிசப்தம் ஏகாந்தம்
அண்டத்தின் தவ மோனம்
கீழ் வானில் மெல்லிய வர்ணஜாலம்
நிலவின் கண்ணில் அதீத நிறை ஒளி
வந்தான் வசீகர புன்னகை பகலவன் !!


வா அன்பே! நெடு நேரம் காத்திருப்பா?
இல்லை அன்பரே இமை பொழுது தான்
கண்ணோடு கண்ணோக்கும் சொற்ப நாழிகை
வரவா சென்று வரவா? ........
செல்லத் தான் வேணுமா ?.......


சொல்லொனா பிரிவில் தின உதயம்!!

விடை தேடும் தேடல்கள் .....

                                          தேடல்

யார் நாம்?


வாழ்க்கை ஓட்டத்தின் தேசாந்திரிகளா?
கால சக்கரத்தின் கை பொம்மைகளா?
கனவுலகின் நிஜ பிம்பங்களா?



பயமுருத்தும் பருவமாற்றத்தின் தகவமைப்புகளா?
பல்கிப் பெருகும் கலப்படத்தின் பரிணாமங்களா?



இயற்கை வளம் சுரண்டும் சுயநலப் பச்சோந்திகளா?
காடழித்து கட்டிடம் பெருக்கும் கல்நெஞ்சர்களா?



இல்லை....

சமூக அவலத்தை இணையத்தில் இடித்துரைக்கும்
இன்றைய இளம் சந்ததியின் ஏற்புடை வழிகாட்டிகளா?



இல்லை...

இதுவும் கடந்து போகும் ஏற்றமுள்ள வேளாண் வளரும்
மாற்றமுடன் மறுமலர்ச்சி வர வித்திடும் வித்தகர்களா?



விடை தேடும் தேடல்கள் .....


என் தந்தை.......



என்  அன்பு  பாசத்   தந்தை....


என்னை அவர் முதற் சிசுவாய் கையிலேந்தி  பரவச உச்சி முகர்ந்தவர் ... 


எனக்கு இவ்வுலகினை அறிமுகம் செய்த அளப்பரிய அன்பர் ...


  "என் அம்மா" என வாஞ்சையுடன் அவர் அன்னையையும் என் வடிவில் கொஞ்சிய பாசக்காரர் ....



  தத்தி தவழ நடை பயில அன்னை மொழி பயில முதல் அடி எடுத்து கொடுத்த வழிகாட்டி ....



சுரம் கபம் என சிறு பிராய நோய் காலங்களில் இரவில் கண்முழித்து என் அன்னையுடன் என்னை கவனித்ததில் என் தாயுமானவன் ....



அழகர் திருவிழா காலங்களில் தன் தோள் மீது எனை ஏற்றி "சாமி பாரூ"  என நெடுந்துரம் வைகையின் அளப்பரிய அழகை காட்டிய சுமைதாங்கி ....



 தான் மேற்படிப்பு பயிலும் காலத்திலும் எனை செந்தமிழ் மாலைகல்லுரிக்கு தவறாமல் அழைத்து சென்று எம் அன்னை தமிழை ருசிக்க செய்த ஆசான்....



பேச்சு போட்டி கட்டுரை திருக்குறள் போட்டிகளில் பங்கு பெற வெற்றி பெற செய்வதில் ஒரு உந்து கோல்....



எமக்கு " நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத திண்மை, திமிர்ந்த ஞானச்செருக்கு" என எழுதிய என் முப்பாட்டன் பாரதியை அறிமுகப்படுத்திய என் சமுகப்பார்வையை விசாலமாக்கிய வேறு பரிமாணத்துக்கு கொண்டு சென்ற தூண்டில் என் தந்தை.....



பருவ மாற்றம் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல, அறிவும்  புத்தியும் சார்ந்தது, என வாழ்வியலின் அழகை எடுத்துரைத்ததில் அவர் ஒரு தோழர் ....


  பட்டப் படிப்பினை நெடும்துரம் சென்று நான் பயில (என் பாட்டன் ஒப்புதலின்று )   "நீ சென்று இவ்வுலகினை பயின்று வா மகளே"   என முகமலர்வோடு எனை    அனுப்பியதில் அவர் ஒரு பெண்ணியவாதி....


 

 இல்லற வாழ்க்கை  என்பது, வாழ்க்கை பயணத்தின் அடுத்த நிலை. இன்ப துன்பம் எல்லாம் வரும். அதை எதிர்நோக்க கடந்து செல்ல, 
சார்புடையதாக்க  பழகிக் கொள் என அறிவுரை சொன்ன என் தந்தையின் கண்ணின் ஓரம் சிறு கண்ணீர் துளிகள்.....


இன்றும் ஏதாவது பதட்டப் பட்டாலும் உடனே என் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை "அப்பா". இதில் என் அன்னைக்கு ஒரு அப்படி ஒரு ஆதங்கம்.... அதில் என் அப்பாவுக்கு அப்படி ஒரு சந்தோசம் பெருமிதம் .....


 

  இன்றும் என் பெயரினை எழுதும் போது "S " என்ற initial தான் உபயோக்கிப்பர் என் தந்தை. அது அவரின் பாசப் பிணைப்பு.

 

இவள் இன்றும் "என் பெண் தான்" என் மரபணுக்களின் பாதியை கொண்டவள். என் சதை, என் ரத்தம், என்னவள் என்பதில் என் தந்தை ஒரு அன்பு பாற்கடல் ...

 

 தந்தையே உங்களின் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, தீர்க்கம், தமிழ் புலமை, இலக்கிய அறிவு, பிறர்க்குதவும் பண்பு, கடும் உழைப்பு, என பார்த்து வியக்கிறேன்....


யோசிக்கிறேன் என் தகப்பன் சாமிக்கு யான் என்ன செய்து இருக்கிறேன் இதுவரை?  விடாத அலைபேசி உரையாடலை தவிர அப்படி ஒன்றும் தெரியவில்லை.... என் செய்ய? யோசிக்கிறேன்.....


 

தந்தையே உம்மை நேசிக்கிறேன். ..


உ ம்மை உன் பெயரை என் மகன் வடிவில் "கண்ணா" என அழைத்து களிப்புருகிறேன் ....

 

 இறைவா என் தந்தைக்கு நீண்ட ஆயுள் தேக பலம், இறையன்பு, மகிழ்ச்சி நிறைய கொடு என இறைஞ்சுகிறேன்... நன்றி நன்றி!!!!

மழை


"மழை வாசம் நாசித் துவாரத்தில் உடுறுவி
பின்னம் பிடரியில் ஒரு புரட்டு புரட்டி
நெட்டுருக்கி மனம் பிசைந்து
ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்லும்
ஒரு உருவில்லா மன ஊக்கி"



மழை வாசம் நம் மண்ணின் வாசம்:-

மழை எப்போதும் வந்தாலும் ஏன் உடனே மனதில் ஒரு இனம் புரியா நெகிழ்ச்சி, பரவசம், தனிமை, சில சமயம் அழுகை, உன்னதம், ஏகாந்தம், ஏன் உன்மத்தம் கூட உண்டாக்குகிறது? இது எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா என பல முறை எண்ணிப் பார்த்ததுண்டு. இன்னும் விடை கிடைக்கவில்லை.

சிறு பிராயத்து மழைக்காலங்கள் :-

காகிதக் கப்பல் போட்டி, ஆற்று வெள்ளப்பெருக்கு, கண்மாய் உடைப்பெடுப்பு, என் அம்மாவின் மழைகால காய்ச்சல், சளி கரிசனம், முன்னெச்சரிக்கை,   என் பொண்ணு பெரியம்மாவின் சுட சுட திடீர் பண்டங்கள், திடீர் பள்ளியின் விடுமுறை குதூகலம், என் சகோதரி சகோதரர், அம்மான் மகன் மகள்களுடன் சேர்ந்து " நம்மளை பற்றிய கதைகள்" கலந்துரையாடல்,

வீதிகளில் வழிந்து புரண்டோடும் நீர் சுழிப்பில் யார் காகிதக் கத்திக் கப்பல் முந்துகிறது என்பதின் போட்டா போட்டி.... என் குட்டி தம்பியின் கேரம் போர்டு களேபர விளையாட்டு, அடை மழையிலும் புதிதாய் துவக்கப் பட்டு ஓடிய "வைகை" விரைவு ரயிலை பார்க்கும் பரவசம், மழை சுழல் காற்றால் பாட்டி வீட்டு மொட்டை மாடி அருகில் உயர்ந்து ஓங்கரித்த பேய் போல மிரட்டிய மரம்....

அடை மழையிலும் ஞாயிறு காலை அனைத்து உறவுகளும் பாட்டி வீட்டில் ஒன்று கூடி உணவருந்தி உறவாடி மகிழ்ந்த தருணங்கள், கோடை மழையில் அப்பாவின் கிராமத்து நிறை கண்மாயில் மதிய நீச்சல்கள், கம்மன் சோறும், புளிகுழம்பு வாசனையும் அன்பும் கலந்து ஊட்டிய என் கொள்ளுப் பாட்டியின் கை மணம், ஐயோ மழையில் நனைந்தால் சேராதே என வயல் காட்டிலிருந்து பாதியில் ஓடி வந்து என் தலை துவட்டிய என் பாட்டி சங்கர வடிவம்மையின் பாசப் பரிதவிப்பு......


இளம்பிராயத்து மழை:-

வார விடுமுறை மழையில், என்னுடன் என் நண்பர் குழாம், நண்டு நடுவார், குண்டு குளுவான் என அனைத்து வானரங்களும்  சேர்ந்து எங்கள் தெருவில் அடை மழையில் கோலி குண்டு விளையாடி பின்பு, அவரவர் வீட்டாரால் பின்னி பெடலெடுத்து துவைத்து கொடியில் காயப் போட்ட தருணங்கள்....

மணல் ஆற்றங்கரையில் மழைக்கால வானவில்லை பார்த்து அதனை நோக்கி ஓடி களைப்புற்ற தருணங்கள்...

"மழை வருது மழை வருது குடை கொண்டு வா" என வானொலில் மழைக்காலத்தில் மாலை மருதம் கேட்டு சொக்கிய நாட்கள் ....

தீபாவளி பண்டிகை முன்தின மாலையில் அடாது மழை பெய்தாலும் விடாது பட்டாசு வாங்கியே தீருவோம் என அப்பா, தம்பி, அம்மான் மகன் கோபியுடன் மதுரை நகரில் தேவதை (எல்லாம் நினைப்பு தான்) போல வலம் வந்த காலங்கள்...

கல்லுரி விழாக் கொண்டத்தில் கூட" ஓகோ மேகம் வந்ததோ" என குடையுடன் ஆடி அனைவரையும் பதறி (?) ஓட வைத்ததில் கூட மழை theme ஒட்டிக் கொண்டது ....

குற்றால சாரல் மழைக்காலத்தில் எம் கல்லூரி வளாகத்தில் பன்னீர் மரச்சொறிவில் பூக்களில் சொட்டும் தேன் நீரை உறுஞ்சி குடித்த அற்பத தருணங்கள்....

அதே மரம் ஒரு சுழல் மழையில் தடாலென வீழ்ந்த பொழுது அய்யோ எனப் பதறிய நிலையில் மழைத்துளி என் கண்ணீர் துளியுடன் கலந்து உப்பாகி போன நினைவுகள் ....

என் கல்லூரி விடுதியில் பட்டப் படிப்பின் நிறைவு நாளில் பெய்த திடீர் மழையில், நானும் என் அன்புத்தோழி அஜிதாவும் தண்ணீர் தொட்டி அருகில், "மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு" என வானமே எல்லையாய் ஆடி பாடி களித்த குதூகலங்கள்....

அதன் பிறகு வாழ்கையின் தொடர் ஓட்டத்தில் மழையும் சாரலாய் சிறு சிறு துறலாய், திடீர் பிரவாகமாய், ஒரு நெருங்கிய பிணைப்புடன் ஒட்டிக் கொண்டுள்ளது.... ஆனால் அந்த ஒரு ஈர்ப்பு குறைந்து விட்டதோ என அவ்வப்போது ஒரு ஏக்கம் தோன்ற ஆரம்பித்து என்னவோ உண்மை... 

ஆனால்?

சென்ற வருடம் கொடைகானல் சென்ற பொழுது பெய்த திடீர் instant மழையில் என்னை மறந்து தூண் பாறை அருகே ஓரிரு நிமிடம் ஆடி குதுகலித்த பொழுது, நெற்றி பொட்டில் அறையாமல், நடு வகிடில் வழிந்தோடிய மழை துளி சொன்னது, நீ தான் மாறி விட்டாய் ..... நான் மாறவில்லயென்று ....

அன்றே என் மழை சிநேகிதியை மறுபடியும் நேசிக்க தொடங்கி விட்டேன் ....

ஆதலினால் மழையை நேசம் செய்வீர்!!!!